Saturday, September 29, 2018

எப்போது பாசம் பிறக்கிறது


எப்போது பாசம் பிறக்கிறது


மணத்திற்கு பின்
கருவறையில் உயிரின் ஆரம்பம்-என
மருத்தவரின் சொல்
கேளும் போதா?

பக்குவமாய்
தடவும் போது இரண்டு
கால்களால் வயிற்றை எட்டி
உதைக்கும் போதா?

தாயின்
முகத்தை பார்க்க வீறுகொண்டு
வாயைப் பிளந்து வந்து
அழும் போதா?

முயற்சியால்
பற்கள் முளைக்கா வாயில்
மழலைச் சொற்களின் ஒலி
விழும் போதா?

முதல்வகுப்பில்
அறிவைப்பிளந்து பெற்ற
மதிப்பெண் அட்டவணையை
நீட்டும் போதா?

சான்றோர்
முன்னிலையில் யாவரும் போற்ற
வென்ற பட்டத்தை தாயின் தலையில்
அணியும் போதா?

ஆண்டுகள் பல
உடனிருந்தும் அறிவைப்பெருக்க
வெளிநாடு செல்கையில்
வழியனுப்பும் போதா?

வருவானென்று
கடிகாரத்தின் எதிரியாய் காலண்டரிடம்
போரிட்டு வழித்தடத்தின் சத்தத்தை
உணரும் போதா?

மனைவியின்
சொல்கேட்டு ஆடினாலும்-அவனின்
விழிகளில் ஒருசொட்டு கண்ணீர்கூட எதிர்பாராமல்
நிற்கும் போதா?

முதியோர்
இல்லம் சென்றாலும்
கொள்ளிவைக்க வருவானா-என
ஏங்கும் போதா?


                                           செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment